செய்திகள்
திருச்சியில் கார் மோதி 8 வயது சிறுவன் பலி
திருச்சியில் கார் மோதி சிறுவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சி:
திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப்ரத்தினம் (வயது 68). இவர் யுவராஜ் (8) என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். நேற்று காலை ஜோசப்ரத்தினம் பொன்மலைப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் யுவராஜை பின்னால் அமர வைத்து கொண்டு ஓட்டி வந்தார். திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், சிறுவன் யுவராஜ் கீழே விழுந்தான்.
இதில் காரின் சக்கரத்தில் சிக்கி யுவராஜ் படுகாயம் அடைந்தான். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அதே காரில் ஏற்றி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மோதி சிறுவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.