செய்திகள்
விளாத்திகுளம் அருகே நத்தம் பகுதியில் நடந்த தி.மு.க. மக்கள் கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய காட்சி

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் - கனிமொழி எம்.பி. பேச்சு

Published On 2021-01-10 13:25 GMT   |   Update On 2021-01-10 13:25 GMT
விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் பகுதியில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
விளாத்திகுளம்:

விளாத்திகுளம் பகுதிகளான படர்ந்த புளி, பிள்ளையார் நத்தம், வேலிடுபட்டி, பேரிலோவன்பட்டி, சிங்கிலிபட்டி, மேல நம்பிபுரம் ஆகிய கிராமங்களில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் கூட அதை பற்றி கவலைப்படுவதற்கு அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. முதியோர் பென்சன் பல இடங்களில் நிறுத்தப்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மறுபடியும் இவற்றை வழங்குவோம். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் யாரும் தமிழ்நாட்டில் வந்து தொழில் முதலீடு செய்ய தயாராக இல்லை. வேலை வாய்ப்புகளை இவர்கள் உருவாக்கவே இல்லை. தற்போது தமிழ்நாட்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் படித்து விட்டு வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆட்சியில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்று விளம்பரம் செய்கிறார்கள். உண்மையில் எல்லாவற்றிலும் தமிழகம் பின்னோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது. இவர்களது ஆட்சி காலத்தில் 16 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். ஆனாலும் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை வரவேற்று இருக்கக்கூடிய ஒரே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். எதிர்காலத்தை பாதுகாக்க கூடிய தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல கூடிய மக்களுக்கான ஆட்சி அமைக்க தி.மு.க.வை ஆதரியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருபர ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூர்யராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News