ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்ட போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா: முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2021-02-13 08:43 GMT   |   Update On 2021-02-13 08:43 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது. இதையொட்டி தெப்பத்துக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மதியம் 1 மணியளவில் மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் ஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் உமா, உள்துறை கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், மோகன், அறங்காலர்கள் கவிதா, ரெங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நாளை மறுநாள் ஹம்ச வாகனத்திலும், 16-ந்தேதி ஹனுமந்தவாகனத்திலும், 17-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும்,18-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 19-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 20-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் நம்பெருமாள் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 21-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 22-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேருகிறார். பின்னர் இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

9-ம் திருநாளான 23-ந்தேதி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்ப திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News