செய்திகள்
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு ஓபிஎஸ், தமிழிசை நேரில் அஞ்சலி
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அருண் ஜெட்லி உடலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி:
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அருண் ஜெட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
அவரது உடலுக்கு தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.