உள்ளூர் செய்திகள்
வாகனத்தை வேகமாக ஓட்டி வந்ததாகக் கூறி உணவக உரிமையாளரை தாக்கிய காவலர்.

ஆட்டோவை வேகமாக ஓட்டியதாக கூறி ஓட்டல் உரிமையாளரை தாக்கிய போலீஸ்காரர்

Published On 2022-01-12 09:20 GMT   |   Update On 2022-01-12 09:20 GMT
ராசிபுரம் அருகே ஆட்டோவை வேகமாக ஓட்டியதாக கூறி ஓட்டல் உரிமையாளரை போலீஸ்காரர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆயில்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் சந்திரபாபு.

இவர் கடந்த 1-ம் தேதி இரவு முள்ளுக்குறிச்சி பஸ் நிலையம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சரக்கு ஆட்டோ ஒன்று கண்ணை கூசும் அளவிற்கு விளக்கு வெளிச்சத்துடன் வேகமாக வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து சந்திரபாபு, ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றார். அந்த ஆட்டோவை முள்ளுக்குறிச்சியில் ஓட்டல் நடத்தி வரும் சந்திரன் என்பவர் பொருட்கள் ஏற்றிக் கொண்டு தனது மனைவியுடன் ஓட்டி வந்துள்ளார். முள்ளுக்குறிச்சி வந்ததும் தனது ஓட்டல் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு ஓட்டலில் போய் உட்கார்ந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற போலீஸ்காரர் சந்திரபாபு என் மீது மோதுகிற மாதிரி ஏன் ஆட்டோவை ஓட்டி வந்தாய்? என்று சந்திரனிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் சந்திரபாபு, ஓட்டல் உரிமையாளர் சந்திரனை தாக்கினார்.

பின்னர் அக்கம்- பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, சந்திரபாபுவை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. சி.சி.டி.வி. கேமரா பதிவுடன் இதுபற்றி சந்திரன் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். மேலும் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடமும் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

போலீஸ்காரருக்கும், ஓட்டல் உரிமையாளர் சந்திரனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அவர்கள் இருவரும் உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே போலீஸ்காரர் தாக்கும் இந்த வீடியோ கேமரா பதிவுகள் தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News