செய்திகள்
பாம்பன் ரெயில் பாலத்தின் அடியில் கடல் கொந்தளிப்பாக இருந்த காட்சி.

புரெவி புயல்- உஷார் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம்

Published On 2020-12-03 02:58 GMT   |   Update On 2020-12-03 02:58 GMT
புரெவி புயல் எச்சரிக்கையாக ராமநாதபுரம் மாவட்டம் உஷார் நிலையில் வைக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கினர்.
ராமநாதபுரம்:

புரெவி புயல் கரையை கடக்கும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்று, கன மழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதி முழுவதும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் உரிய அடிப்படை வசதிகளுடன் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

புயல் இன்று மதியம் கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் பிற்பகலில் திடீரென்று பலத்த காற்றுடன் மழைபெய்ய தொடங்கியது. பட்டப்பகலிலும் கருமேகம் காரணமாக வெளிச்சம் இன்றியே காணப்பட்டது.

கடற்கரையோரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மரங்கள் பலத்த காற்று காரணமாக அசைந்தாடின. சில இடங்களில் கடல் அமைதியாக காணப்பட்டதால் புயலின் தாக்கம் அதிகமாக இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். வீடுகளிலேயே முடங்கினர். கடற்கரையோரங்கள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்த்தனர்.

புரெவி புயல் வலுவிழந்து கரையை கடந்துவிடும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகலுக்கு மேல் நிலவிய சூழ்நிலை அதற்கு மாறாக இருக்கும் என கருதியதால் மக்களிடையே அச்சம் நிலவியது. அதற்கேற்றாற்போல மழை இடைவிடாது பெய்ததோடு காற்றும் பலமாக வீசியது. புயல் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் தங்களின் வீடுகளின் மாடிகளில் இருந்த பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வைத்தனர். வாகனங்களை புயல் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர்.

இதேபோல, கால்நடைகளை பாதுகாப்பாக கட்டிவைத்தனர். மின்வாரியத்தினர் மின்கம்பங்கள் மற்றும் மின்வயர்கள் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யவும், புயல் காற்று வீசத்தொடங்கியதும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சப்ளையை துண்டிக்கவும் தயார்நிலையில் வைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள், கூரை வீடுகள் மற்றும் சுவர்கள் பலவீனமான வீடுகளில் இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லும் பணியில் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

புயல் மற்றும் பலத்த மழை எச்சரிக்கையை தொடர்ந்து விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் ஏற்கனவே இருந்த தண்ணீரை வெளியேற்றியும், தண்ணீர் அதிகஅளவில் தேங்காதவாறும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பொதுப்பணித்துறையினர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News