செய்திகள்
சத்துவாச்சாரி அரசுப்பள்ளியில் திறனாய்வு தேர்வு எழுதிய மாணவிகளை படத்தில் காணலாம்.

வேலூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு - 2,307 பேர் எழுதினர்

Published On 2021-02-22 12:24 GMT   |   Update On 2021-02-22 12:24 GMT
வேலூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 307 பேர் எழுதினார்கள்.
வேலூர்:

தமிழக அரசு தேர்வுகள் சார்பில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை (என்.எம்.எம்.எஸ்.) பெறும் தகுதியை நிர்ணயிக்கும் வகையிலான தேர்வு நேற்று நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 2 ஆயிரத்து 439 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்கள் தேர்வு எழுத வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடி, கணியம்பாடி, சேர்க்காடு, கே.வி.குப்பம், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 21 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் 1 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடைபெற்றது.

தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 8.30 மணி முதல் வரத்தொடங்கினர். சோதனைக்கு பின்னர் 9 மணி அளவில் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒரு அறையில் 10 பேர் அமர்ந்து தேர்வு எழுதினர்.

திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 307 மாணவ-மாணவிகள் எழுதினர். 132 பேர் தேர்வு எழுதவில்லை.

வேலூர், காட்பாடியில் உள்ள தேர்வு மையங்களை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார்.

தேர்வு அறை மற்றும் மையங்களை கண்காணிக்கும் பணியில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News