செய்திகள்
திருப்பூர் டாஸ்மாக் கடையில் மோதல் - வாலிபரை கொன்ற பார் உரிமையாளர் உள்பட 4பேர் கைது
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வந்த பாபுராஜா, பெருமாநல்லூர் பகுதியில் உள்ள மதுபான பாருக்கு சென்ற போது பணம் கேட்டது தொடர்பாக அவருக்கும் பார் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
திருப்பூர்:
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாபுராஜா ( வயது 37). இவரது பெற்றோர் திருப்பூர் வாஷிங்டன் நகரில் வசித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வந்த பாபுராஜா, பெருமாநல்லூர் பகுதியில் உள்ள மதுபான பாருக்கு சென்ற போது பணம் கேட்டது தொடர்பாக அவருக்கும் பார் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து மதுபான பார் உரிமையாளர் கண்ணப்பன் அளித்த புகாரின்பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுராஜாவை கைது செய்தனர் .
இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த பாபுராஜா தேனி மாவட்டம் சின்னமனூரில் குடியிருந்து வந்தார் . இந்தநிலையில், தனது பெற்றோரை பார்த்து செல்வதற்காக, பெருமாநல்லூர் அருகே உள்ள வாஷிங்டன் நகருக்கு வந்தார். அப்போது மீண்டும் பாபுராஜா அங்குள்ள மதுபான பாருக்கு சென்று ரூ.10 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் பாபுராஜாவை அங்கிருந்த ஊழியர்கள் தாக்கியுள்ளனர் . இதில் பாபுராஜா காயம் அடைந்தார் . இதையடுத்து அவரது நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர் . அங்கு அவர் திடீரென இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பெருமாநல்லூர் போலீசார் , பாபுராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பார் ஊழியர்கள் தாக்கியதால் பாபுராஜா இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு பார் உரிமையாளர் கண்ணப்பன் (45), ஊழியர்கள் ராமச்சந்திரன் (50), உதயசந்திரன் (19), முனியசாமி (25) ஆகிய 4பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான ரஞ்சித் என்பவரை தேடி வருகின்றனர்.