செய்திகள்
உயிரிழப்பு

பள்ளி கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழப்பு

Published On 2019-08-21 06:08 GMT   |   Update On 2019-08-21 06:08 GMT
பள்ளி கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பணியில் கவனக்குறைவாக இருந்த வகுப்பு ஆசிரியையை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த புங்கனூரை சேர்ந்தவர் ரெட்டியப்பா இவரது மனைவி நந்தினி. இவர்களின் மகன் ஹர்‌ஷவர்தன் (வயது 6). ஈஸ்ட்பேட்டை நகராட்சி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று பள்ளியில் சக நண்பர்களுடன் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது விளையாட்டாக சக மாணவர்கள் ஹர்‌ஷவர்தனை பள்ளி கழிவறையில் வைத்து தாழ்ப்பாள் போட்டு பூட்டி விட்டு வகுப்பறைக்கு சென்று விட்டனர். கழிவறையில் இருட்டாக இருந்ததால் பயத்தில் தவித்த ஹர்‌ஷவர்தன் கத்தி கதறி அழுதான்.

அந்த வழியாக வந்தவர்கள் சத்தம் கேட்டு கழிவறையில் இருந்து ஹர்‌ஷவர்தனை மீட்டு பள்ளி ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இதில் பயந்துபோன ஹர்‌ஷவர்தனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

அவரது பெற்றோர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புங்கனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் ஹர்‌ஷவர்தன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து தகவலறிந்த புங்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

பணியில் கவனக்குறைவாக இருந்த வகுப்பு ஆசிரியையை போலீசார் எச்சரிக்கை செய்தனர். மேலும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News