கிணத்துக்கடவில் காந்தி பண்ணை காவலாளி கல்லால் அடித்துக்கொலை
கிணத்துக்கடவு:
கோவை கிணத்துக்கடவு கோடங்கிபாளையத்தில் அரசுக்கு சொந்தமான காந்தி பண்ணை உள்ளது. இங்கு பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன் காவலாளியாக இருந்தவர் செல்வராஜ் (வயது 55). இவரது மனைவி சித்ரா. இவர்கள் உள்பட 3 குடும்பத்தினர் வளாகத்திலேயே வசித்து வருகிறார்கள்.
நேற்று வழக்கம்போல் செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டார். சித்ரா வீட்டில் தூங்கச்சென்றார். நள்ளிரவு 2 மர்ம நபர்கள் சித்ரா வீட்டின் கதவை தட்டினர். தூக்கத்தில் இருந்து எழுந்த சித்ரா யார்? என்று கேட்டார். அப்போது மர்ம நபர்கள் உன் கணவரை கொன்றுவிட்டோம். அங்கே சென்று பார் என்று கூறினர்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சித்ரா கதவை திறக்காமல் வீட்டுக்குள் இருந்தே அலறி சத்தம்போட்டார். சத்தம் கேட்ட பக்கத்தில் இருந்த 2 குடும்பத்தினர் எழுந்து ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர்.
பின்னர் கதவை திறந்து வெளியே வந்த சித்ரா மர்ம நபர்கள் கூறியது குறித்து தெரிவித்து கதறி அழுதார். பின்னர் சித்ரா உள்பட அனைவரும் செல்வராஜ் வேலை செய்த இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது செல்வராஜை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. காவலாளி கொலை குறித்து தகவல் பரவியதும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இது குறித்து காந்தி பண்ணை கணக்காளர் ஸ்ரீகாந்தராஜூ கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். அவர்களை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினால் தான் செல்வராஜ் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் கூறினர்.