செய்திகள்
கோப்பு படம்.

வேலூரில் மாநகராட்சி பெண் பணியாளர் தீக்குளிப்பு

Published On 2021-01-10 09:42 GMT   |   Update On 2021-01-10 09:42 GMT
வேலூரில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பெண் பணியாளர் தீக்குளித்தார். அவர், எரியும் தீயுடன் நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:

வேலூர் ஓல்டு டவுன் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவரின் மனைவி தனலட்சுமி (வயது 28). இவர் வேலூர் மாநகராட்சியில் தற்காலிகமாக டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் தனலட்சுமிக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வேலை முடிந்ததும் மாலை 6 மணி அளவில் வேலூர் அண்ணாசாலையில் உள்ள போக்குவரத்துப் பணிமனை எதிரே சங்கரன்பாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்றார். திடீரென அவர் தான் கையில் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

தீ உடல் முழுவதும் பரவியது. அவர் வலி தாங்க முடியாமல் எரியும் தீயுடன் கூச்சலிட்டு அலறியபடி நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வேலூர் தெற்குப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் கடன் பிரச்சினை என்பது தெரியவந்துள்ளது. அது உண்மையா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.
Tags:    

Similar News