ஓடும் பஸ்சில் கைவரிசை - மூதாட்டியிடம் நகை பறித்த 2 இளம்பெண்கள் கைது
நெல்லை:
சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை சிவானந்தா தெருவை சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவரது மனைவி செண்பகம் (வயது 65). இவர் நெல்லையில் பொருட்கள் வாங்கிவிட்டு டவுன் பஸ்சில் பத்தமடைக்கு சென்று கொண்டிருந்தார்.
பத்தமடை பஸ் நிறுத்தத்தில் இறங்கும்போது, கூட்ட நெரிசலில் இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பின்னால் இருந்து 2 பெண்கள் இழுத்து அறுத்தது தெரியவந்தது.
உடனே அவர் கூச்சல் போட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் அந்த பெண்ணுக்கு பின்னால் நின்ற 2 பெண்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த 2 பெண்களும் நாங்கள் திருடவில்லை என்று கூறி பஸ் நிறுத்தத்தில் இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால் பஸ்சில் வந்த பயணிகள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பத்தமடை போலீசார் அந்த 2 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது திருடப்பட்ட செயின் அவர்களிடம் இருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். உடனடியாக அந்த 2 பெண்களையும் கைது செய்தனர்.
கைதான பெண்கள் திருச்சி மணப்பாறையை சேர்ந்த மணி என்பவரது மனைவி பிரியா (27), ரவி மனைவி சுப்பு (37) என்று தெரியவந்தது.
இவர்கள் மேலும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.