செய்திகள்
கோப்புப் படம்

தெலுங்கானாவில் பிப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் - சந்திரசேகர் ராவ்

Published On 2021-01-11 22:10 GMT   |   Update On 2021-01-11 22:10 GMT
தெலுங்கானாவில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
ஐதராபாத்:

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020-21-ம் கல்வி ஆண்டுக்காக கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நெருங்கி வருவதால் கட்டாயம் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கத் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை அவர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதேபோல இன்டர்மீடியட் கல்லூரிகள் மற்றும் டிகிரி கல்லூரிகளுக்கும் பிப்ரவரி 1 முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துபேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த 1-ம் தேதி முதல் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.

குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் தற்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News