ஆன்மிகம்
தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவத்தின் போது சாமிக்கு தீபாராதனை நடந்த போது எடுத்தபடம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2020-11-19 07:25 GMT   |   Update On 2020-11-19 07:25 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அங்காரத்தில் சாமி சன்னதியில் எழுந்தருளி 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து பிடாரி அம்மன் சன்னதிக்கு வந்தார். அங்கு அம்மனுக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடந்தது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையொட்டி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உற்சவ நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், சாமி தூக்கும் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அம்மனை மேளதாளங்களும் 5-ம் பிரகாரம் கொண்டு வந்தனர். மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பிடாரி அம்மன் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார்.

இன்று (வியாழக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. காலையில் மற்றும் இரவில் கோவில் 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெறும். அதிலிருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெற உள்ளது.

கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ந் தேதி (10-ம் நாள் விழா) அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மதியம் சுப்ரமணியர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News