செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.22லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து ரூ.22லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கே.கே.நகர்:
சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த நாகூர் மீரான் , முகமது அலீப் ஆகியோரை சோதனை செய்த போது அவர்கள் , உள்ளாடையில் 586 கிராம் எடை கொண்ட ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரும் அடிக்கடி வெளி நாடுகளுக்கு சென்று தங்க நகைகளை கடத்தி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் குருவிகளாக செயல்பட்டு தங்கம் கடத்தலில் ஈடுபட்டனரா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.