உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி கைது
தஞ்சையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்து கொலை திட்டம் தீட்டிய ரவுடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பட்டீஸ்வரம்:
தஞ்சை பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் மோகன், தலைமை காவலர் உமாசங்கர் மற்றும் காவலர்கள் அருண்மொழி அழகு சுந்தரம் நவீன் மற்றும் சுஜித் ஆகியோர் அடங்கிய தஞ்சை சரக தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனிப்படை போலீசாருக்கு தஞ்சை மானோஜிப்பட்டி பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு நபர் சுற்றி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து மானோஜிப்பட்டிக்கு சென்ற தனிப்படை போலீசார் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த அந்தோணியார் கோவில் தெரு மைக்கேல் ராஜ் (34) என்பவரை கைது செய்தனர்.
தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் நடத்திய விசாரணையில் மைக்கேல் ராஜ் தஞ்சை மாவட்ட பகுதிகளில் பல வழக்குகளில் சம்பந்தபட்ட பிரபல ரவுடி மானோஜிப்பட்டி சங்கரின் கூட்டாளி.
இருவரும் இணைந்து ஒரு கொலைக்கான சதி திட்டம் தீட்டி வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து மைக்கேல் ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.