செய்திகள்
கைதான சஞ்சய், அவரது மனைவி சுருதி ஆகியோரை படத்தில் காணலாம்.

தீபாவளி செலவுக்காக நகை கொள்ளையடித்த தம்பதி கைது

Published On 2021-11-09 04:30 GMT   |   Update On 2021-11-09 04:30 GMT
தீபாவளி செலவுக்காக மூதாட்டி வாயில் துணியை திணித்து 11 பவுன் நகையை கொள்ளையடித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி நாச்சிகவுண்டர்வீதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 76). இவர் கடந்த 2-ந் தேதி மாலை தனது வீட்டில் துணியை காயப்போட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு ஆணும், பெண்ணும் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். ஜெயலட்சுமி சத்தம் போடாத வகையில் அவரது வாயில் துணியை வைத்து திணித்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஜெயலட்சுமியை தாக்கி கொள்ளையடித்த நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சஞ்சய் (21) மற்றும் அவரது மனைவி சுருதி (20) என்பது தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஜெயலட்சுமி வீட்டில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டனர்.

போலீசாரிடம் கணவன்-மனைவி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தோம். மேலும் தீபாவளி செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டோம். அப்போது மூதாட்டி ஜெயலட்சுமி தனியாக இருப்பதை அறிந்தோம். எனவே அவரை தாக்கி நகை கொள்ளையடித்தால் அந்த பணத்தில் தீபாவளியை கொண்டாடலாம் என திட்டமிட்டோம். அதன்படி ஜெயலட்சுமியிடம் நகை பறித்து தீபாவளியை கொண்டாடினோம். ஆனால் போலீசில் சிக்கிக் கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News