செய்திகள்
தற்கொலை

பொங்கல் பண்டிகை நாளில் வீட்டுக்கு மனைவி வராததால் அரசு பஸ் டிரைவர் தற்கொலை

Published On 2021-01-15 20:22 GMT   |   Update On 2021-01-15 20:22 GMT
பொங்கல் பண்டிகை நாளில் வீட்டுக்கு மனைவி வராத சோகத்தில் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு வீரப்பபிள்ளை தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது45). இவர் பொறையாறில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சித்ரா.

இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனிடம் கோபித்துக்கொண்டு நாகூர் அருகே தென் கரையில் உள்ள தாய் வீட்டுக்கு சித்ரா சென்று விட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகை நாளில் மாதவன், சித்ராவை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை என தெரிகிறது. இதனால் சோகத்தில் இருந்த மாதவன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் அங்கு சென்று மாதவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொங்கல் பண்டிகை நாளில் மனைவி வீட்டுக்கு வராத சோகத்தில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News