செய்திகள்
கொரோனாவுக்கு பலியான பீகார் தலைமை செயலாளர்
பீகார் தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங், வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெறவிருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
பாட்னா:
இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கோரத்தாண்டவம் ஆடுகிறது. தினந்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தினசரி உயிரிழப்பு 3000ஐ தாண்டி உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் உள்ள முன்களப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு தலைவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பீகார் தலைமை செயலாளர் அருண் குமார் சிங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாட்னா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் இன்று உயிரிழந்தார்.
தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங், வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெறவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.