வழிபாடு
திருஉத்தரகோசமங்கை

திருஉத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் சந்தனகாப்பு களையும் ஆருத்ரா தரிசனம் 19-ந்தேதி நடக்கிறது

Published On 2021-12-03 05:33 GMT   |   Update On 2021-12-03 05:33 GMT
திருஉத்தரகோசமங்கையில் வருகிற 19-ந்தேதி ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை கோவில் உள்ளது. இங்கு மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். மேலும், இங்கு எழுந்தருளி உள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.

வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இதன்படி வருகிற 10-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வரும் 19-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று இரவு 11 மணிக்கு மேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல்பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி உரிய கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News