செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

எக்ஸ்ரே முடிவை வெள்ளை தாளில் எழுதி கொடுப்பதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Published On 2021-10-06 10:29 GMT   |   Update On 2021-10-06 10:29 GMT
நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி எக்ஸ்ரே முடிவுகளை வெள்ளைத்தாளில் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை ஒப்பிடும்போது தி.மு.க. ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2021-2022-ம் ஆண்டிக்கான திருத்திய பட்ஜெட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, நீதித்துறை நிர்வாகம், நெடுஞ்சாலைகள் துறை, உயர் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை, எம்.ஜி.ஆர். மதிய உணவு திட்டம், பள்ளிக் கல்வித்துறை, குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதன் காரணமாக அந்தத் துறைகளின் செயல்பாடுகள் ஏதாவது சுணக்கம் ஏற்படும் என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் அப்போது எழுந்தது. அது தற்போது நிரூபிக்கப்பட்டு விட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஊடுகதிர், அதாவது எக்ஸ்ரே எடுத்துக்கொண்ட மக்களுக்கு அதற்கான முடிவுகள் வெள்ளைத்தாளில் விநியோகிக்கப்படுகின்றன என்றும், இதற்குக் காரணம் நிதிப்பற்றாக்குறை என்றும், கடந்த சில வாரங்களாக இதுபோன்ற நிலை நிலவுவதாகவும் கூறுகிறார்கள்.

நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி எக்ஸ்ரே முடிவுகளை வெள்ளைத்தாளில் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதும், இரண்டாவது கருத்துரை வாங்கும் வகையில் வேறு ஒரு மருத்துவரிடம் காண்பிக்க வசதியாக தங்களுக்கு எடுக்கப்படும் எக்ஸ்ரேவுக்கான முடிவுகள் படச்சுருளில் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News