ஆன்மிகம்
சிவபெருமான்

ஈசனின் கருணையை சொல்லும் ‘திருவிளையாடல் புராணம்’

Published On 2021-09-24 08:16 GMT   |   Update On 2021-09-24 08:16 GMT
சைவ சமயத்தின் முதன்மை கடவுளாகத் திகழும் சிவபெருமான், மதுரை நகரில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் வரலற்றை ‘திருவிளையாடல் புராணம்’ என்கிறோம்.
‘புராணம்’ என்பதற்கு ‘பழமைவாய்ந்த வரலாறு’ என்று பொருள். அதே போல் இறைவனால் நடத்தப்படும் செய்வதற்கரிய செயல்களை ‘திருவிளையாடல்’ என்பார்கள். சைவ சமயத்தின் முதன்மை கடவுளாகத் திகழும் சிவபெருமான், மதுரை நகரில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் வரலற்றை ‘திருவிளையாடல் புராணம்’ என்கிறோம். உலக உயிர்களிடம் அன்பு கொண்டு, அவர்களுக்கு அருள் செய்த இறைவனின் கருணையை கதை களாக இந்த புராணம் விளக்குகிறது.

இந்த நூலை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். இருப்பினும் இந்த புராணம் முதன் முதலாக தமிழ்க்கடவுளான முருகப்பெருமானால், அகத்தியருக்கு அருளப்பட்டது. அகத்தியர் மூலம் மற்ற முனிவர்கள் அறிந்துகொண்டனர்.

பரஞ்சோதி முனிவர் சிவதல யாத்திரை மேற்கொண்ட வேளையில், மதுரைக்கு வந்து தங்கினார். அப்போது அவரது கனவில் தோன்றிய மீனாட்சி அம்மன், திருவிளையாடல் புராணத்தைப் பாட கட்டளையிட்டார். அதன்படி அவர் இயற்றியதே ‘திருவிளையாடல் புராணம்.’

திருவிளையாடல் புராணத்தை ‘திருஆலவாய் மான்மியம்’, ‘மதுரைப் புராணம்’ என்றும் அழைக்கிறார்கள்.

தமிழ் மொழியில் உள்ள மூன்று புராணங்கள், சிவபெருமானின் மூன்று கண்களோடு ஒப்பிடப்படுகின்றன. அதில் சேக்கிழார் இயற்றிய ‘பெரியபுராணம்’ வலது கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய ‘கந்தபுராணம்’ நெற்றிக்கண்ணாகவும், ‘திருவிளையாடல் புராணம்’ இடது கண்ணாகவும் விளங்குகின்றன.

இந்தப் புராணம், மொத்தம் 3 ஆயிரத்து 363 பாடல்களால் ஆனது. இறைவனின் திருவிளையாடல் 344-வது செய்யுளில் இருந்துதான் தொடங்குகிறது. அதற்கு முந்தை 343 செய்யுள்களும், செய்யுள் காப்பு மற்றும் மதுரை நகர சிறப்புகளை எடுத்துரைக்கின்றன.

திருவிளையாடல் புராணமானது, ‘மதுரைக் காண்டம்’, ‘கூடற்காண்டம்’, ‘திருஆலவாய் காண்டம்’ என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய் காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன.

இதில் இந்திரன் பழி தீர்த்த படலம் முதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

நான்மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன.

திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

64 திருவிளையாடலைசொல்லும் படலங்கள்

1. இந்திரன் பழி தீர்த்த படலம்

2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

3. திருநகரங்கண்ட படலம்

4. தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்

5. தடாதகை பிராட்டியாரின் திருமணப் படலம்

6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்

9. ஏழுகடல் அழைத்த படலம்

10. மல‌யத்துவசனை அழைத்த படலம்

11. உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்

12. உக்கிரபாண்டியனுக்கு வேல், வளை, செண்டு கொடுத்த படலம்

13. கடல் சுவற வேல்விட்ட படலம்

14. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்

15. மேருவைச் செண்டால் அடித்த படலம்

16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்

17. மாணிக்கம் விற்ற படலம்

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

19. நான்மாடக் கூடலான படலம்

20. எல்லாம் வல்ல சித்தரான படலம்

21. கல்யானைக்குக் கரும்பருத்திய படலம்

22. யானை எய்த படலம்

23. விருத்த குமார பாலரான படலம்

24. கால்மாறி ஆடின படலம்

25. பழி அஞ்சின படலம்

26. மாபாதகம் தீர்த்த படலம்

27. அங்கம் வெட்டின படலம்

28. நாகம் எய்த படலம்

29. மாயப் பசுவை வதைத்த படலம்

30. மெய் காட்டிட்ட படலம்

31. உலவாக்கிழி அருளிய படலம்

32. வளையல் விற்ற படலம்

33. அட்டாம சித்தி உபதேசித்த படலம்

34. விடை இலச்சினை இட்ட படலம்

35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

36. இரசவாதம் செய்த படலம்

37. சோழனை மடுவில் வீழ்த்திய படலம்

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

41. விறகு விற்ற படலம்

42. திருமுகம் கொடுத்த படலம்

43. பலகை இட்ட படலம்

44. இசைவாது வென்ற படலம்

45. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்

46. பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்

47. கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம்

48. நாரைக்கு முக்தி கொடுத்த படலம்

49. திருஆலவாயான படலம்

50. சுந்தரப் பேரம்பு எய்த படலம்

51. சங்கப்பலகை கொடுத்த படலம்

52. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

53. கீரனை கரையேற்றிய படலம்

54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

55. சங்கத்தார் கலம்தீர்த்த படலம்

56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

57. வலை வீசின படலம்

58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்

59. நரியை பரியாக்கிய படலம்

60. பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்

61. மண் சுமந்த படலம்

62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

63. சமணரை கழுவேற்றிய படலம்

64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்
Tags:    

Similar News