ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பிரம்மோற்சவ விழா திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஸ்ரீகாளஹஸ்தி :
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் விரைவில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. பிரம்மோற்சவ விழாவின்போது சாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கும். அந்தத் திருக்கல்யாண உற்சவத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் வந்து பங்கேற்குமாறு முன்கூட்டியே அழைப்பு விடுப்பதற்காக கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி மாட்டுப்பொங்கலையொட்டி நேற்று நடந்தது. அதில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்திராஜு, ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் அலங்கார மண்டபத்தில் இருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜகோபுரம் வழியாக 4 மாட வீதிகளில் வலம் வந்து, பஜார் தெரு, தெலுங்கு கங்கை கால்வாய் அலுவலகம் வழியாக 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிரிவலம் சென்றனர். வழிநெடுகிலும் உள்ள சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் குடிநீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.