உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை எட்டியது- திருச்சி மத்திய மண்டலத்தில் சிகிச்சையில் 14,801 பேர்

Published On 2022-01-23 04:06 GMT   |   Update On 2022-01-23 04:06 GMT
மத்திய மண்டலத்தை பொறுத்தவரை நேற்று அதிகபட்சமாக தஞ்சையில் 840 பேருக்கு தொற்று உறுதியானது. ஒருவர் பலியான நிலையில் தற்போது 3,959 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திருச்சி:

தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளதோடு, உயிர்ப்பலியும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே மத்திய மண்டலமான திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் நேற்று திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே நாளில் 3,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 6 பேர் பலியாகி உள்ளனர். இது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றையும் தாண்டி நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

மத்திய மண்டலத்தை பொறுத்தவரை நேற்று அதிகபட்சமாக தஞ்சையில் 840 பேருக்கு தொற்று உறுதியானது. ஒருவர் பலியான நிலையில் தற்போது 3,959 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்தபடியாக திருச்சியில் 705 பேருக்கு தொற்று உறுதியானது. 2 பேர் பலியான நிலையில் 4,107 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவாரூரில் 342 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 1,365 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரூரில் ஒரே நாளில் 207 பேருக்கு தொற்று உறுதியானது. ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தற்போது 1,087 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாகையில் 218 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு 962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுக்கோட்டையில் 236 பேருக்கு தொற்றும், 935 பேர் சிகிச்சையிலும், அரியலூரில் 163 பேருக்கு தொற்றும், 820 பேர் சிகிச்சையிலும், பெரம்பலூரில் 113 பேருக்கு தொற்றும், 698 பேர் சிகிச்சையிலும் உள்ளனர்.

மயிலாடுதுறையில் நேற்று ஒரே நாளில் 168 பேருக்கு தொற்று உறுதியானது. 868 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் திருச்சி மத்திய மண்டலத்தில் 1,507 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 14 ஆயிரத்து 801 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News