செய்திகள்
கோவாவில் ஆகஸ்ட் 2 வரை ஊரடங்கு நீட்டிப்பு
கோவாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.70 லட்சமாக உயர்ந்துள்ளது.
பனாஜி:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,70,491ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,158 ஆக உள்ளது.
இந்நிலையில், கோவாவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போது அமலில் உள்ள ஊரடங்கை ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படும் என முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.