இந்தியா
மனைவி - கணவன்

மனைவியை மாற்றும் குழுக்களுக்கு உதவியாக இருந்த கொரோனா கட்டுப்பாடுகள்

Published On 2022-01-16 09:36 GMT   |   Update On 2022-01-16 09:38 GMT
மனைவி மாற்றும் குழுக்களுக்கு முக்கிய பிரமுகர்கள் உதவி செய்ததோடு மாநிலத்தில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளும் மறைமுகமாக உதவி புரிந்துள்ளன.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம், கருக்கச்சால் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் கணவரின் கொடுமை குறித்து புகார் செய்தார்.

அதில்,பெண்ணின் கணவர், அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க கூறியதாகவும், அதற்கு மறுத்தால் குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். போலீசார் பெண்ணின் கணவரை கைது செய்து விசாரித்தனர்.

இதில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் செயல்படும் ரகசிய குழு பற்றிய தகவலை பெண்ணின் கணவர் தெரிவித்தார். அந்த குழுவில் இடம்பெற்றவர்கள், மனைவிகளை மாற்றி உல்லாசம் காண்பதாகவும், அந்த குழுவில் தானும் இடம் பெற்றிருப்பதால், தனது மனைவியையும், பிறருடன் உல்லாசமாக இருக்க கூறியதாகவும் தெரிவித்தார்.

பெண்ணின் கணவர் கூறிய தகவலின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் கேரளாவை மட்டும் மையமாக வைத்து சுமார் 20 குழுக்கள் செயல்பட்டதும், இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இக்குழுக்களை உருவாக்கியவர்கள் யார்? எங்கிருந்து செயல்படுகிறார்ககள் என்பதை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

இதில் மனைவி மாற்றும் குழுக்களின் செயல்பாடுகள் அனைத்தும் பரம ரகசியமாக இருந்ததை போலீசார் அறிந்து கொண்டனர். குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அடிக்கடி அவர்களின் பண்ணை வீடுகளிலும், உல்லாச விடுதியிலும் ஒன்று கூடி மனைவி மாற்றும் திருவிழாவை கொண்டாடி உள்ளனர்.

விழாவில் பங்கேற்க வருவோர் ஜோடி, ஜோடியாக வருவதால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படுவதில்லை. மேலும் அவர்கள் அதிக அளவில் கூடாமல் ஒவ்வொரு விருந்தின் போதும் 10 அல்லது 20 ஜோடிகளே பங்கேற்பதால், அதனை பார்க்கும் யாரும் பெரிதாக நினைத்து கொள்ளவில்லை.

மேலும் இந்த விருந்து நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவியருடன் கலந்து கொண்டுள்ளனர். இதுவும் விருந்து நடக்கும் பகுதி மக்களுக்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதனால் மனைவி மாற்றும் குழுவினர் தங்களின் திருவிழாவை எந்த தடையும் இன்றி ஜோராக நடத்தி உள்ளனர்.

மனைவி மாற்றும் குழுக்களுக்கு முக்கிய பிரமுகர்கள் உதவி செய்ததோடு மாநிலத்தில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளும் மறைமுகமாக உதவி புரிந்துள்ளன.

கொரோனா கட்டுப்பாடு காலத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டிருந்ததால் பண்ணை வீடுகளில் ஒருசில ஜோடிகள் மட்டும் கூடி கும்மாளம் அடித்ததை அக்கம்பக்கத்தினர் யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. எனவே இது போலீசாரின் கவனத்திற்கும் செல்லவில்லை.

மனைவி மாற்றும் குழுக்களில் இணைந்த உறுப்பினர்கள் பலரும் உல்லாசம் அனுபவிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தாலும், இக்குழுக்களை தொடங்கியவர்கள், இதன்மூலம் அதிகஅளவில் பணம் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளது.

கொரோனாவால் உலக பொருளாதாரமே சிக்கலில் இருந்த போது, இக்குழுக்களை தொடங்கியவர்கள் மட்டும் பண மழையில் நனைந்துள்ளனர்.

விருந்து நிகழ்ச்சிக்கு வரும்போது, உறுப்பினர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலித்து கொள்கிறார்கள். குறிப்பாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பணம் வசூலித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒவ்வொருவரிடமும் வாங்கும் பணம் மூலம் இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்திருக்கும் என தெரியவந்துள்ளது. எனவே இக்குழுவின் தரகர்கள் யார்? இவர்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்பது பற்றியும் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Tags:    

Similar News