செய்திகள்
பிரியங்காவின் அம்மா

என் மகளை கொன்றவர்களை உயிரோடு எரிக்க வேண்டும்- பிரியங்காவின் தாய் ஆவேசம்

Published On 2019-11-30 10:06 GMT   |   Update On 2019-11-30 10:06 GMT
அப்பாவியான தன் மகளை கொலை செய்தவர்களை பொதுமக்கள் முன்பு வைத்து உயிரோடு எரிக்க வேண்டும் என பிரியங்காவின் தாய் ஆவேசமாக கூறினார்.
நகரி:

பிரியங்கா கொலை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரது தாய் பிரியங்கா கண்ணீர் மல்க கூறியதாவது:-

பிரியங்கா, அவளது தங்கைக்கு போன் செய்த வி‌ஷயம் எனக்கு தெரியாது. வண்டி பஞ்சர் பற்றியும், அவளை 4 பேர் பின் தொடர்ந்து சென்றது பற்றியும் எனக்கு தெரியாது.

இரவு 10 மணிக்கு போன் ‘ரீச்’ ஆகவில்லை என்றதும் என் இளைய மகள் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்த போலீசார் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை பார்த்துள்ளனர். அதில் கச்சி பவுலி நோக்கி என் மகள் சென்றது தெரிய வந்தது.

அதனால் போலீசார் எங்களை சம்ஷாபாத் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்குமாறு கூறி உள்ளனர். அவர்கள் எங்களிடம் விசாரணை நடத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

பிறகு சம்ஷாபாத் போலீஸ் நிலையம் சென்றோம். வெகுநேரம் கழித்து 2 போலீஸ்காரர்களை எங்களோடு அனுப்பி வைத்தனர். நாங்கள் என் மகள், வண்டியை தள்ளிக் கொண்டு வந்ததாக கூறிய இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்தோம். அதிகாலை 4 மணி வரை தேடியும் என் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

என் மகள் அப்பாவி. அவளை கொலை செய்தவர்களை எல்லோர் முன்பு வைத்து உயிரோடு எரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரியங்காவின் தங்கை பவ்யா கூறுகையில், “போலீஸ் நிலையங்களுக்கு மாறி, மாறி அலைந்ததிலேயே 3 மணி நேரம் வீணாகி விட்டது. போலீசார் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி இருந்தால் என் அக்காவை காப்பாற்றி இருக்கலாம்” என்றார்.

இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவனான சென்னகேசவலு தாய் ஜெயம்மா கூறும்போது, “மகன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதை அறிந்ததும், எனது கணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறோம். இந்த பாவச் செயலில் ஈடுபட்ட எனது மகனை எரித்து கொன்றால்கூட எனக்கு கவலை இல்லை. எங்களுக்கும் மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக வெளியில் சென்றுவர வேண்டும். மகனுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் கவலை கிடையாது” என்றார்.
Tags:    

Similar News