செய்திகள்
உங்களால் எதையும் செய்ய முடியும் என நம்புங்கள் - இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
உங்களது திறமைகளை வெளிப்படுத்துங்கள், எதையும் செய்யமுடியும் என நம்புங்கள் என இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.
லக்னோ:
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் விவேகானந்தரின் 157வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஐந்து நாள் தேசிய இளைஞர் தின கருத்தரங்கம் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை காணொளி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அப்போது பேசிய பிரதமர், ‘இன்று இளைஞர்கள் புதிய செயலிகளை உருவாக்குகிறார்கள், இது தனிநபர் வாழ்க்கையை எளிதாக்க உதவுகிறது, மேலும் நாட்டின் நலனுக்கும் பங்களிக்கிறது. நாட்டில் மாறிவரும் வேலைவாய்ப்புகளின் தன்மைக்கு ஏற்ப இன்றைய இளைஞர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்குகிறார்கள்.
துணிச்சலுடன் செயல்பட்டு, மற்றவர்களுக்கு வேலை வழங்குகிறார்கள். நமது அரசு இளம் மனநிலையுடனும், கனவுகளுடனும் உள்ளது. இளைஞர்களே உங்களது திறமைகளை வெளிப்படுத்துங்கள், உங்களால் எதையும் செய்ய முடியும் என நம்புங்கள், நல்வாழ்த்துக்கள்’ என கூறினார்.