உள்ளூர் செய்திகள்
கோவையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 47 பேர் கைது
இவர்களிடம் இருந்த 835 மது பாட்டில்கள், ரூ.9,320 ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை:
மகாவீர் ஜெயந்தியையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மாநகர போலீசார் பெரியக்கடை வீதி, ஆர்.எஸ்.புரம், வெரைட்டிஹால் ரோடு, காட்டூர்,சாய்பாபா காலனி, ரத்தினபுரி, ராமநாதபுரம், செல்வபுரம், போத்தனூர், சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது மாநகர பகுதிகளில் தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்த 835 மது பாட்டில்கள், ரூ.9,320 ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.