செய்திகள்
கோப்புபடம்

லாலாபேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பெட்டிக்கடைக்காரர் பலி

Published On 2021-06-10 16:18 GMT   |   Update On 2021-06-10 16:18 GMT
லாலாபேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பெட்டிக்கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
லாலாபேட்டை:

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). இவர் மேட்டு மகாதானபுரம் இரட்டை வாய்க்கால் அருகே சொந்தமாக பெட்டிக்கடை வைத்து நடத்தியுள்ளார்.

இவரது கடையின் அருகே உள்ள தோட்டத்து வீட்டில் கூரை அமைப்பதற்காக இரும்பு குழாயை தோளில் சுமந்து கொண்டு நேற்று மதியம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பிமீது இரும்புகுழாய் பட்டது. இதில் செல்வராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது..

இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜூக்கு திருமணாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News