செய்திகள்
கோப்பு படம்

விஜய் வீட்டில் வருமானவரி சோதனை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - புதுவை காங்கிரஸ் கடும் கண்டனம்

Published On 2020-02-08 13:53 GMT   |   Update On 2020-02-08 13:53 GMT
நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என புதுவை காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் திரை உலகின் புகழ்பெற்ற முன்னணி நடிகரும் தனது நற்பணி மன்றத்தின் மூலம் தினந்தோறும் மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் திரைப்பட நடிகர் அன்பு சகோதரர் நடிகர் விஜய் இல்லத்தில் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் வருமான வரித்துறை திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அடாவடியாக சோதனை செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

மத்திய அரசையும், பாரதிய ஜனதா கட்சியையும் யார் விமர்சித்தாலும் அவர்கள் மீது அரசு எந்திரங்களை ஏவி விட்டு பணிய வைக்க முயற்சிக்கும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தொடர்ந்து செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

சமுதாயத்தில் முக்கிய நபராக, இளைஞர்களின் எழுச்சி நாயகனாக திகழ்ந்து வரும் அன்பு சகோதரர் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி எதேச்சதிகார போக்கோடு செயல்பட்ட விதம் நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற அச்ச உணர்வு தற்போது எல்லோர் மனதிலும் ஏற்பட்டுள்ளது.

வருமானவரி கணக்கு தவறாக காட்டப்பட்டு இருந்தால் அதற்கு உண்டான உரிய தொகையை வசூலிக்க சட்ட ரீதியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, நடிகர் விஜயை அநாகரீகமாக கீழ்த்தரமாக நடத்தியிருப்பது வெட்கி தலைகுனிய வேண்டிய வேதனைக்குரிய செயலாகும்.

தங்களை எதிர்ப்பவர்களை வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனை மூலம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பாசிச பா.ஜனதா அரசு நடிகர் விஜயின் உரிமைக்குரலை ஒடுக்குவதற்கும், அவரின் வளர்ச்சியை தடுப்பதற்கும் அவரை அடிபணிய வைப்பதற்கும் துடித்துக் கொண்டிருக்கிறது.

அரசு எந்திரத்தை சுய அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி எல்லோரையும் பணிய வைத்து தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. திறன்கொண்ட தமிழர்களும் தீரமிகு மதசார்பற்ற அணிகளும் இருக்கும் வரை தமிழகம் மற்றும் புதுவையில் பா.ஜனதா ஒரு நாளும் தலைதூக்க முடியாது. மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்து அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு தொடர்ந்து செயல்படும் மோடி தலைமையிலான சர்வாதிகார மக்கள் விரோத அரசுக்கு மக்கள் சக்தி வெகுவிரைவில் பாடம் புகட்டும். பா.ஜனதாவின் பூச்சாண்டிக்கும் மோடியின் அச்சுறுத்தலுக்கும் நடிகர் விஜய் உள்ளிட்ட எந்த தன் மானமுள்ள தமிழனும் தலை வணங்க மாட்டான்.

இவ்வாறு நமச்சிவாயம் அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News