களியக்காவிளை அருகே குடித்துவிட்டு தகராறு செய்ததால் மகனை அடித்து கொன்றேன்- கைதான தந்தை வாக்குமூலம்
களியக்காவிளை:
பளுகல் அருகே, இடைக்கோடு, பாலோட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லன்(வயது 70).
இவருடைய மகன் ரெஜிகுமார் (37). குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் இடைக்கோடு பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்றும் இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த ரெஜிகுமார் தாய், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவர்களை தாக்கவும் செய்தார். அதோடு அவர்களை கொன்று விடுவேன் என்று மிரட்டவும் செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்லன் அங்கு கிடந்த மரக்கட்டையால் ரெஜிகுமாரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அதே இடத்தில் ரெஜிகுமார் இறந்தார்.
இது குறித்து ரெஜிகுமாரின் அக்கா ரெஜினி (38) பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் இதுபற்றி வழக்குப் பதிவு செய்தார். களியக்காவிளை இன்ஸ்பெக்டர் எழிலரசி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு செல்லனை கைது செய்தார்.
செல்லனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மகன் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததோடு, தன்னை தாக்கியதால் ஆத்திரத்தில் அடித்துவிட்டதாக கூறினார்.
இதையடுத்து கைதான செல்லனை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.