செய்திகள்
பள்ளி கல்வித்துறை

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 14-ந்தேதி முதல் பள்ளிக்கு வர உத்தரவு

Published On 2021-06-09 04:13 GMT   |   Update On 2021-06-09 06:52 GMT
பள்ளி வளாகம் மற்றும் வகுப்புகளை தூய்மைப்படுத்தல், மாணவர்களை கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது உள்பட பல்வேறு வகையான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு நடத்தப்படவில்லை. மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்களை வழங்குவது, உயர்க்கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளன.


இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டி உள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும். கற்றல்-கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்களையும் வழங்க வேண்டியுள்ளது.

பள்ளி வளாகம் மற்றும் வகுப்புகளை தூய்மைப்படுத்தல், மாணவர்களை கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது உள்பட பல்வேறு வகையான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 14-ந்தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News