ஆன்மிகம்
முருகன்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க 48 நாட்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்

Published On 2020-09-30 07:18 GMT   |   Update On 2020-09-30 07:18 GMT
சந்தோஷமான குடும்பத்தை பெற்றவர்கள் கூட, உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க 48 நாட்கள் இந்த விரத வழிபாட்டை செய்து பலனடையலாம்.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக சொல்லப்படும் முருகப் பெருமானை நினைத்து நம்முடைய வீட்டில் நாம் செய்யப்போகும் விரத  வழிபாடுதான் இது. காலையில் எழுந்து எப்போதும்போல குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, உங்கள் பூஜை அறையில் தரையில் இடம் இருந்தால், தரையை கொஞ்சம் தண்ணீர் போட்டு துடைத்துக் கொள்ளுங்கள். தரையில் கோலம் போட வசதி இல்லை என்றால், அலமாரியாக இருந்தாலும் கூட பரவாயில்லை. அந்த இடத்தை கொஞ்சம் தண்ணீர் போட்டு துடைத்து விடுங்கள்.

கொஞ்சம் அரிசிமாவு எடுத்துக்கொண்டு, அந்த இடத்தில் ஸ்டார் கோலம் வரைந்து விட வேண்டும். அந்த ஸ்டார் கோலத்தில் உள்ளே மஞ்சளால் வர்ணம் தீட்டுவது போல, மஞ்சள் பொடியை நிரப்பி விடுங்கள். கொஞ்சமாக குங்குமத்தையும் கோலத்தில் நடுமத்தியில் வைத்துவிடுங்கள். கொஞ்சம் போல மஞ்சள் தூளை எடுத்து, அதில் பன்னீர் ஊற்றி, பிசைந்து, நடுவில் வைத்த குங்குமத்தின் மேல் பக்கத்தில் வைத்து, அதன் மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நெய் ஊற்றி திரி போட்டு, அந்த விளக்குக்கு பக்கத்தில் ஒரு பூவை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். (கோலத்தின் நடுவில் பன்னீர் ஊற்றி பிசைந்த மஞ்சள் கலவைக்கு மேல், அகல் தீபம் தீபம் வைக்கப்பட்டு எரிய வேண்டும்.)

பூஜை அறையில் எப்போதும் போல சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, உங்கள் வீட்டில் வழக்கம் போல் தீபமேற்றி வைத்து, பூஜைக்குத் தயாராக வேண்டியது தான். அதன் பின்பாக நீங்கள் தரையில் ஒரு விரிப்பு விரித்து அதன்மேல் அமர்ந்து, அல்லது மரபலகையின் மீது அமர்ந்து கோலத்தின் மேல் தயாராக இருக்கும் தீபத்தை ஏற்றி விட்டு, 108 உதிரி புஷ்பங்களை கையில் வைத்துக் கொண்டு, ‘ஓம் சரவண பவ’ என்ற மந்திரத்தை உச்சரித்து அந்த தீபத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனையை முடித்துவிட்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய குடும்ப பிரச்சனையை சொல்லி, வீட்டில் சுபகாரியங்கள் நடந்துகொண்டே இருக்கவேண்டும். வீட்டில் நிம்மதி இருக்க வேண்டும் என்ற நேர்மறை எண்ணத்தோடு வேண்டுதலை வைத்தால், உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய எப்பேற்பட்ட பிரச்சனையும் 48 நாட்களுக்குள் ஒரு முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 48 நாட்கள் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வாரம்தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் இந்த பூஜையியை நம்முடைய வீட்டில் செய்து வரலாம். அடுத்த நாள் காலை வரை அந்தக் கோலம் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கலாம்‌. காலை கையாலேயே அந்த கோலத்தை சுத்தப்படுத்தி கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். முருகப் பெருமானை நினைத்து செய்யக்கூடிய இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையோடு செய்தவர்கள், யாரும் வாழ்க்கையில் தோற்றதில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
Tags:    

Similar News