உள்ளூர் செய்திகள்
முகக்கவசம் அணியாமல் சென்ற 1,018 பேர் மீது வழக்கு பதிவு- சென்னை போலீசார் நடவடிக்கை
பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து கொரோனா நோய் தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகர போலீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், ஜூன் 21-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்தது.
அதன் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் முறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை பெரு நகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து, விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வார காலத்தில் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 556 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 9 ஆட்டோக்கள் என மொத்தம் 565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், முகக்கவசம் அணியாமல் சென்ற நபர்கள் மீது 1,018 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து கொரோனா நோய் தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு