செய்திகள்
பாஜக

புதுவையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு எப்போது?- பா.ஜனதா தலைவர் பதில்

Published On 2021-05-12 07:30 GMT   |   Update On 2021-05-12 07:30 GMT
கொரோனா தொற்றால் முதல்-அமைச்சர் ரங்கசாமி பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் புதுவை திரும்பிய பிறகு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கோஷ்டி பூசல் காரணமாக நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்காமல் இருந்தனர். ஆனால், மாநிலத்தின் உரிமையை காக்கவும், மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தவும், மத்திய மாநில அரசுகளுக்கு இடை யில் இணைப்பு பாலமாக இருக்கவும், மத்திய பா.ஜ.க. அரசு 3 எம்.எல்.ஏ.க்களை நியமித்துள்ளது,

இவர்கள் தங்களது மக்கள் பணியை சிறப்பாக செய்வார்கள். தேர்தல் நேரத்திலேயே கூட்டணி கட்சிகளிடம் நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக பேசியிருந்தோம். அதோடு, அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவத்தை பா.ஜ.க. வழங்கி உள்ளது.



கூட்டணியில் சிறிய பிரச்சினைகள் கூட ஏற்படக்கூடாது என்பதற்காக மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். 5 ஆண்டுகாலம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி புதுவையில் நீடிக்கும். கொரோனா தொற்றால் முதல்-அமைச்சர் ரங்கசாமி பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் புதுவை திரும்பிய பிறகு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

ஆளும் கட்சியை ஆதரித்தால் தான் தங்கள் தொகுதிக்குரிய பலன் கிடைக்கும் என்பதால் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தானாக முன்வந்து ஆளும் அரசை ஆதரிக்கிறார்கள்.

தற்போது எங்கள் கூட்டணியில் 19 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருக்கிறது. நாங்கள் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை அனுகுவதாகவும் பேசுவதாகவும் கூறப்படும் தகவல்கள் தவறானவை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News