உள்ளூர் செய்திகள்
மரணம்

வாலாஜாபாத் அருகே பூட்டிய வீட்டுக்குள் மூதாட்டி பிணமாக மீட்பு

Published On 2022-01-11 07:57 GMT   |   Update On 2022-01-11 07:57 GMT
வாலாஜாபாத் அருகே பூட்டிய வீட்டுக்குள் மூதாட்டி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத்:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு கிராமத்தில் வசித்து வந்தவர் ராணி (வயது 85). இவரது மகள் லட்சுமி. இவர் காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது தாய்க்கு தேவையான உணவை நாள்தோறும் வழங்கி வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது தாய்க்கு உணவு வழங்க வந்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து தனது தாய் வெளியூர் ஏதாவது சென்று இருக்கலாம் என்று நினைத்து உள்ளார்.

இந்த நிலையில் ராணி வசித்து வந்த வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து லட்சுமி வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூதாட்டி ராணி கட்டிலில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள்.
Tags:    

Similar News