ஆன்மிகம்
அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன்-ஆரல்வாய்மொழி

அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன்-ஆரல்வாய்மொழி

Published On 2021-03-01 01:33 GMT   |   Update On 2021-03-01 01:33 GMT
கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஆரல்வாய்மொழியில் அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் உள்ளது.
கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல்.

தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது. மூவேந்தர்களும் கூடிக் கலையும் இடம் என்பதால், ‘முப்பந்தல்‘ என்ற பெயர் வந்ததாம்.

முப்பந்தலை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் பழவூர். இதன் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நாட்டியக்காரி ஒருத்தி வசித்தாள். இவளின் மகள் இசக்கி. இவளை, பழவூரில் வளையல் வியாபாரம் செய்து வந்த செட்டியார் ஒருவரின் மகன் விரும்பினான். இசக்கியை விரும்பினான் என்பதை விட, அவளுக்காக அவளின் தாய் சேர்த்து வைத்திருந்த சொத்துகளை விரும்பினான் என்றே சொல்ல வேண்டும். இதையறியாத இசக்கி, செட்டியாரின் மகனை மனதார நேசித்தாள். இவர்களின் காதலைச் செட்டியார் ஏற்கவில்லை.

எனினும், மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்க விரும்பாத இசக்கியின் தாய், பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்து செட்டியாரின் மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்தாள். இசக்கியின் ஊரிலேயே அவர்களது தனிக்குடித்தனம் ஆரம்பித்தது. மனைவியின் மேல் பிரியமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்ட செட்டியாரின் மகன், அவளது சொத்தை அபகரிக்கும் தருணத்துக்காகக் காத்திருந்தான்.

அன்றைய தினம்… முப்பந்தலில் மூவேந்தர்களுக்கும் மத்தியஸ்தம் நடந்தது. இதைக் காண்பதற்காக இசக்கியை அழைத்துச் சென்றான் செட்டியார் மகன். வழியில், பயணக் களைப்பும் தாகமும் சேர்ந்து அவளை வாட்டின. உடனே அந்த இடத்தில் மணலை குவித்து, இசக்கியை அதில் படுக்கச் சொன்ன செட்டியார் மகன், தண்ணீர் கொண்டு வருவதாகக் கூறிச் சென்றான். அப்படியே உறங்கிப் போனாள் இசக்கி. திரும்பி வந்த செட்டியார் மகன், இதுதான் தக்க தருணம் என்று கருதி பாறாங்கல்லைத் தூக்கி இசக்கியின் தலையில்போட்டான். துடிதுடித்து இறந்தாள் இசக்கி.

பிறகு, தனக்கும் தாகம் எடுக்கவே தண்ணீரைத் தேடி ஓடினான். சிறிது தூரத்தில் பாழடைந்த கிணறு ஒன்றைக் கண்டவன், அதிலிருந்து தண்ணீர் சேகரிக்க முயன்றான். அப்போது, கருநாகம் தீண்டி அந்த இடத்திலேயே விழுந்து இறந்தான்.

இந்த நிலையில், தெய்வப் பிறவியான இசக்கி, சிவபெருமானிடம் சென்று தன் கணவனே தன்னைக் கொன்ற விவரத்தைக் கூறி நியாயம் கேட்டாள். அவளிடம், “அவன் செய்த பாவத்துக்கு அவனும் பலியாகி விட்டான்” என்றார் சிவன். ஆனாலும் இசக்கி சமாதானம் அடையவில்லை.

“என்னை நம்ப வைத்து சாகடித்தவனை, நானே பழி தீர்க்க வேண்டும். எனவே, என்னையும் அவனையும் உயிர்த்தெழச் செய்யுங்கள்” என்று வேண்டினாள். ‘அப்படியே ஆகட்டும்‘ என அருளினார் சிவன். அதன்படி, கிணற்றடியில் இறந்து கிடந்த செட்டியார் மகன் தடாலென எழுந்து வீட்டுக்குச் சென்றான். இசக்கியோ, பிறந்த வீட்டுக்கும் செல்லாமல், புகுந்த வீட்டுக்கும் போகாமல் கணவனை அழிப்பதற்காக சுற்றித் திரிந்தாள்.

மாதங்கள் கடந்தன. ஒரு நாள், பழவூர் நோக்கி ஆவேசத்துடன் கிளம்பினாள் இசக்கி. வழியில், கள்ளிச்செடியை ஒடித்துத் தனது கக்கத்தில் வைத்துக் கொண்டாள். அந்தச் செடி, குழந்தையாக மாறியது.

குழந்தையுடன் பழவூர் மந்தைக்கு வந்தவள், ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டினாள். “உங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவன், என்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு, இங்கு வந்து விட்டான். என்னையும் அவனையும் சேர்த்து வையுங்கள்” என்று முறையிட்டாள்.

பஞ்சாயத்தார், “உன் கணவன் யாரென்று சொல்” என்றனர். உடனே குழந்தையைத் தரையில் இறக்கி விட்டவள், “இந்தக் குழந்தை தன் தகப்பனை அடையாளம் காட்டும்” என்றாள். அதன்படி, கூட்டத்தில் இருந்த செட்டியார் மகனை, ‘அப்பா‘ என்று அழைத்தபடி அவனிடம் சென்றது குழந்தை. உடனே, இருவரையும் சேர்த்து வைப்பது எனப் பஞ்சாயத்தார் முடிவு செய்தனர். “கொலை செய்யப்பட்டவள் உயிருடன் எப்படி வந்தாள்?” என்று குழம்பித் தவித்தான் செட்டியார் மகன். பஞ்சாயத்தாரும் ஊர்மக்களும் சேர்ந்து, இருவரையும் ஒரு வீட்டுக்குள் தள்ளி கதவைப் பூட்டினர். தவிர, வீட்டுக்கு வெளியே காவலுக்கும் நின்றனர்.

வீட்டுக்குள் விசுவ ரூபமெடுத்து தன்னை வெளிக் காட்டினாள் இசக்கி. அரண்டு போன செட்டியார் மகன் அவளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். ஆனால் மனம் இரங்காத இசக்கி, விடிவதற்குள் அவன் கதையை முடித்துவிட்டு வெளியே வந்தாள். ஆனாலும் அவளது கோபம் தணியவில்லை. பழவூர் கிராமத்தையே தீக்கிரையாக்கினாள். எரிந்து சாம்பலாகும் ஊரைப் பரவசத்துடன் பார்த்தவள், நீலி கோலத்துடன் மேற்கு நோக்கி நடந்தாள்.

அன்று முப்பந்தல் கிராமத்தில் மூவேந்தர்களும் ஒளவையும் கூடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே நீலிக் கோலத்தில் செல்லும் இசக்கியைப் பார்த்த ஒளவை பிராட்டியார், அவளை அழைத்து சாந்தப்படுத்தி, “இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்” என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள். ஊரைக் காக்கும்தெய்வமானாள். முப்பந்தலில் குடியேறியதால், “முப்பந்தல் இசக்கியம்மன்” என்று பெயர் கொண்டாள்.

இதன் பிறகு இசக்கியின் அண்ணன்களான சுடலைமாடன், பட்டவராயன் இருவரும் அவளுக்குத் துணையாக அவளது வாசலிலேயே குடியேறினர். துவக்கத்தில் இசக்கியம்மனுக்கு ஒரேயொரு கோயில் மட்டுமே இருந்தது. பின்னர், பூர்வீக கோயிலுக்கு அருகிலேயே புதிய கோயில் ஒன்றையும் எழுப்பினர்.

பொதுவாக இசக்கி அம்மனின் வடிவம் ஒரு கை இடுப்பைப் பிடித்தபடியும், மறுகை ஒரு குழந்தையை இடுப்பில் இடுக்கியபடியும் இருக்கும். வாய் அகலத் திறந்திருக்கும், கழுத்தில் அழகிய ஆபரணங்கள் வரையப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு இந்த உருவம் கொடூரமாகக் காணப்படும். இதற்கு நேர்மாறான சாந்த வடிவமும் சில இடங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான இசக்கி வடிவங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டவையே. கல்வடிவ இசக்கியம்மன் கோயில்கள் காலத்தால் பிற்பட்டவையாகும்.

பூர்வீக கோயிலின் முக்கிய கருவறையில் இசக்கியம்மன் இருக்கிறாள். இந்த சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில், குழந்தை வரம் வேண்டி பக்தர்களால் கட்டப்பட்ட பிரார்த்தனைத் தொட்டில்கள் உள்ளன. இந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தால், முகப்பு மண்டபம். இங்கு கிழக்கு நோக்கி நிற்கிறார் சுடலைமாடன். பூர்வீகக் கோயில், வீடு போன்ற அமைப்பில் உள்ளது.

புதிய கோயில் கோபுரத்துடன் காட்சி தருகிறது. கருவறையில் மூலவ மூர்த்தமாக காட்சி தருகிறாள் இசக்கி அம்மன். இவளுக்கு வலப் புறம் பிராமணத்தி அம்மன். கருவறையின் வெளிச் சுற்றில் விஷ்ணு துர்கை மற்றும் வைணவிதேவியை காணலாம். மேற்கு பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், ஒளவையாரம்மன், பாலமுருகன் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். கோயில் முகப்பில் கிழக்கு நோக்கி சுடலைமாடன்; எதிரே பட்டவராயர்.

இங்கு எழுந்தருளிக்கும் இசக்கியம்மனைப் பங்காளிகள் சொத்தினைப் போல் பங்கிட்டு இரு கோயில்களாக்கி வழிபட்டு வருகின்றனர். கோயிலுக்கு சற்று தள்ளித் திறந்தவெளியில் சுமார் 133 அடி உயர இசக்கி யம்மனின் பிரமாண்ட சிலையை தரிசிக்கலாம். இங்கு, திருவிழா, கொண்டாட்டம் ஆகியவை இசக்கிக்கு இல்லையெனினும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமையில் ‘ஊட்டு படைப்பு‘ வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், பகல் முழுவதும் இசக்கியம்மனுக்கும் பிற தெய்வங்களுக்கும் விசேட பூசைகள் நடை பெறும். அப்போது ஒளவையாரம்மனுக்கு கொழுக் கட்டைப் படையல் வைத்து, பூசைகள் செய்வர். அன்று இரவு 12:00 மணிக்குப் பச்சரிசி சாதம் வடித்து பல வகை காய்கறிகளுடன் கூட்டு சமைத்து படையலிடுகின்றனர். அப்போது இசக்கியம்மனுக்கு அருகில் உள்ள பிராமணத்தி அம்மனை பிராமணர்கள் வழிபடுவர். இந்த வைபவத்தின்போது, இசக்கியம்மனின் அருளால் வேண்டுதல் பலித்த பக்தர்கள், மனித உருவ பொம்மைகளைச் செய்து எடுத்து வந்து அம்மன் வாசலில் வைக்கின்றனர்.

பிளவுக்கல் என்ற இடத்தில் இருக்கும் இசக்கி அம்மன் இருதாரத்து மக்களின் சொத்து பாகப்பிரிவினைக்காக உயரமான பாறையைச் சமமாக பிளந்து வெளிப்பட்டாள் என்ற கதையும் காணப்படுகிறது. குழந்தை வரம், திருமண பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வு ஆகியவற்றை அருளும் இசக்கியம்மனின் மகிமையை அறிந்த கேரள மக்களும் இங்கு வந்து குழுமுகிறார்கள்.

மகிமை நிறைந்த திருஷ்டிக் கயிறு!

இசக்கியம்மன் கோயிலில் சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணங்களில் திருஷ்டிக் கயிறு வழங்குகின்றனர். 41 நாட்கள், அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூசித்துத் தரப்படும் இந்தக் கயிறைக் கட்டிக் கொண்டால், திருஷ்டி கழியும்; காத்து, கருப்பு அண்டாது என்பது நம்பிக்கை. இங்கு, திருநீறுக்கு பதிலாக மஞ்சனையை (தண்ணீரில் குழைத்த மஞ்சள்) வாழை இலையில் மடித்துக் கொடுக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் இசக்கியம்மன் கோயில் கொண்டிருப்பதால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், மறக்காமல் அம்மனுக்குக் காணிக்கை செலுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால், தங்களுடன் வழித்துணையாக வருவாள் இசக்கியம்மன் என்பது அவர்களது நம்பிக்கை.
Tags:    

Similar News