வேலாயுதம்பாளையம் அருகே அரசு ஊழியர் மர்ம மரணம்
வேலாயுதம்பாளையம்:
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் கலைவாசன் (வயது41) இவர் கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் பொதுப்பணித்துறை கரைக்காவலராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தவமலர் (37) இவர்கள் கரூர் மாவட்டம், புஞ்சைபுகளூரில் உள்ள பொதுப் பணித்துறை குடியிருப்பில் வசித்து வந்தனர்.
கலைவாசனுக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இந்நிலையில் கலைவாசன் நொய்யல் விநாயகர் கோவில் அருகே உள்ள படித்துறையில் படுத்திருந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மகன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கலைவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கலைவாசனின் மனைவி தவமலர் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.