செய்திகள்
வீட்டின் பீரோவில் இருந்து துணிகள் சிதறிக் கிடப்பதை காணலாம்.

தபால் அதிகாரி வீட்டில் 140 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2019-10-06 11:08 GMT   |   Update On 2019-10-06 11:08 GMT
காரைக்குடி அருகே ஓய்வு பெற்ற தபால் அதிகாரி வீட்டில் 140 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது ரஸ்தா. இங்குள்ள காதி நகரைச் சேர்ந்தவர் ஜெய ராஜ் (வயது60). ஓய்வு பெற்ற தபால் அதிகாரி. இவரது மனைவி காணிக்கை மேரி.

இவர்களது 3 மகன்களும் பெங்களூர், ராமேசுவரம் பகுதிகளில் வசித்து வருகின்றனர். கடந்த 26-ந்தேதி ராமேசுவரத்தில் இருக்கும் மகன் வீட்டிற்கு ஜெயராஜூம், காணிக்கைமேரியும் சென்றனர்.

இதனால் ரஸ்தாவில் உள்ள வீட்டில் யாரும் இல்லை. வீடு பூட்டிக் கிடந்தது. இதனை அறிந்த மர்ம மனிதர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஒவ்வொரு அறைக்கும் சென்று பீரோ, சூட்கேஸ் ஆகியவற்றை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு ஜெயராஜ் மனைவியுடன் வீடு திரும்பினார். வீட்டிற்குள் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சோமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

வீட்டில் இருந்த 140 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News