செய்திகள்
பொதுமக்கள் போராட்டம்

சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி காலிகுடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்

Published On 2019-08-07 10:52 GMT   |   Update On 2019-08-07 10:52 GMT
மருங்காபுரி அருகே இன்று சாலை சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நவலூரணிப்பட்டியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்தும் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி தவிப்புக்கு ஆளாகினர். சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை காலிகுடங்களுடன் தொட்டியப்பட்டி மணப்பாறை-பாலக்குறிச்சி சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்ததும் வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பல நாட்களாக குடிநீரின்றி தவித்து வருகிறோம். இதற்கு முன்பும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது பல முறை போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது பேச்சுவார்த்தைக்கு வரும் நீங்கள், அந்த நேரத்தில் மட்டும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கிறீர்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார், மறியலை கை விடுங்கள், குடிநீர் விநியோகிக்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் சாலையின் ஓரமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு ஊராட்சி அதிகாரிகள் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் நவலூரணிப்பட்டி பகுதிக்கு குடிநீர் விநி யோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News