முத்துப்பேட்டை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
முத்துப்பேட்டை:
நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன் (வயது 35). இவர் மனைவி பாரூக் பானு. இவர்களுக்கு முகமது இரியாஸ்(8) என்ற மகனும், அஜிகா(5) என்ற மகளும் உள்ளனர்.
காஜா மைதீன், மனைவி, குழந்தைகளுடன் முத்துப்பேட்டை பக்ரிவாடி தெருவில் வசித்து வந்தார். அங்குள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் காஜா மைதீன் தினமும் மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த காஜா மைதீன், மதுவில் விஷம் கலந்து குடித்தார். முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் இறந்து கிடந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுபற்றி முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து காஜா மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீதார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.