செய்திகள்
ஈரோட்டில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
ஈரோட்டில் மின்சாரம் தாக்கி வடமாநில சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பீகார் மாநிலம் முஜாபூர் மாவட்டம் ஸ்ரீகாந்சிம்ரா பர்காயூன் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரசைனி. இவருடைய மகன் அஜய்குமார் (வயது 15). இவன் ஈரோடு கிருஷ்ணா டாக்சிரோடு பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வேலை செய்து வந்தான். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பிறகு கடையை அடைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எடை போடும் கருவியின் சுவிட்ச் தொகுப்பை சிறுவன் அஜய்குமார் எதிர்பாராமல் தொட்டான். இதில் அவனது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அங்கேயே அஜய்குமார் மயங்கி விழுந்தான்.
இதைத்தொடர்ந்து சக ஊழியர்கள் அவனை மீட்டு ஆட்டோ மூலமாக சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அஜய்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.