செய்திகள்
என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு

Published On 2019-12-07 14:51 GMT   |   Update On 2019-12-07 14:51 GMT
ஐதராபாத் நகரில் போலீசாரின் என்கவுன்ட்டரில் 4 கற்பழிப்பு குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தையும் அவர்களின் பிரேதங்களையும் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஐதராபாத்:

ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயது கால்நடை பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சைபராபாத் பகுதி போலீசார்  நேற்று அதிகாலை 3 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற ஐதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அழைத்து சென்றனர்.

எரிந்த பிரேதம் மீட்கப்பட்ட பாலத்தின் அருகே சென்றபோது அவர்கள் எப்படி கொலை செய்தார்கள்? என்பதை குற்றவாளிகள் நடித்து காட்டினார்கள். அப்போது 4 பேரும் திடீரென போலீசாரின் ஆயுதங்களை பறித்தும், கற்களால் தாக்கியும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் குற்றவாளிகள் 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

ஐதராபாத் போலீசார் நடத்திய என்கவுன்ட்டர் தொடர்பாக தாமே முன்வந்து விசாரணை செய்வதற்கு முன்வந்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம் சம்பவ இடத்துக்கு ‘உண்மை கண்டறியும் குழுவை’ அனுப்பி வைக்கவுள்ளதாக நேற்று தெரிவித்திருந்தது.



இந்நிலையில், டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ‘உண்மை கண்டறியும் குழு' அதிகாரிகள் இன்று பிற்பகல் ஐதரபாத் வந்தடைந்தனர். மெகபூப்நகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளின் பிரேதங்களையும் ஆய்வு செய்தனர்.

பின்னர், என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட இடத்தை இன்று மாலை பார்வையிட்ட அதிகாரிகள் இதுவரை கிடைத்த தடயங்களை சேகரித்துள்ளனர்.
Tags:    

Similar News