செய்திகள்
கைது

விருதுநகரில் பழிக்குப்பழியாக நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் 2 பேர் கைது

Published On 2019-11-13 10:04 GMT   |   Update On 2019-11-13 10:04 GMT
விருதுநகரில் பழிக்குப்பழியாக நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்:

விருதுநகர் அல்லம்பட்டி மாத்துநாயக்கன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சண்முக வேல்ராஜா (வயது 44), கட்டிட காண்டிராக்டரான இவர் சமீபத்தில் விருதுநகர் ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணி அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். நேற்று இரவு சண்முக வேல்ராஜா, வீட்டின் முன்பு மனைவி வசந்தி, தாயார் பவானி (62) ஆகியோருடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சண்முகவேல் ராஜாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சண்முகவேல் ராஜா பலியானார்.

மனைவி மற்றும் தாயார் கண் முன்பு நடந்த இந்த கொலை சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் கிழக்கு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் பழிக்குப்பழியாக சண்முக வேல்ராஜா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு மே மாதம் முத்து காமாட்சி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சண்முக வேல்ராஜா கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

இந்த கொலைக்கு பழி வாங்கும் நோக்கில் முத்து காமாட்சியின் சகோதரர் விக்கி என்ற விக்னேஷ் கோஷ்டி தான் தற்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது என போலீசார் விசாரணையில் தகவல் கிடைத்தது.

கொலை செய்யப்பட்ட சண்முகவேல் ராஜா வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் விக்கி கோஷ்டி தான் கொலை செயலில் ஈடுபட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து விக்கி என்ற விக்னேஷ்வரன், சேர்மராஜ், சதீஷ்குமார், பாலமுருகன், கீர்த்தீஸ்வரன், கிரி, சதீஷ்குமார் என்ற வெள்ளையன், மற்றொரு சதீஷ்குமார் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சேர்மராஜ், சதீஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News