ஆன்மிகம்
கொட்டாரம் ஆஞ்சநேயருக்கு 12 வகை சிறப்பு அபிஷேகம்
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி கொட்டாரம் ராமர்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு 12 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொட்டாரம் நந்தவனத்தில் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 29-வது ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. நேற்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, 5.15 மணிக்கு கலச பூஜை, காலை 8 மணிக்கு பஜனை நடந்தது.
பஜனையை கொட்டாரம் ராமர் திருக்கோவில் பக்தர்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள், களபம், அரிசி மாவு, பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், சந்தனம் ஆகிய 12 வகையான அபிஷேகம் 9 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு நடத்தப்பட்டது.
தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானத்தை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி ஸ்ரீ மணியா இன்டர்நேஷனல் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி தாளாளர் கோபாலகிருஷ்ணன், தொழில் அதிபர் தேசிக சங்கர், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்த ராவ், டாக்டர் கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாலையில் ராம நாம சங்கீர்த்தனம், தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேக அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கொட்டாரம் நந்தவனம் ராமர் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.