செய்திகள்
அரசு வேலை கேட்டு தனியார் பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மனு
தற்போது மகளிர் கட்டணமில்லா திட்டத்தால் தனியார் பஸ்களில் பெண்கள் குறைந்த அளவிலேயே பயணிக்கின்றனர்.
திருப்பூர்:
கொரோனாவால் தனியார் பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அரசு வேலை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களான வீரக்குமார், செல்வராஜ், வெள்ளிங்கிரி, மன்சூர் ஆகியோர் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலால் கடந்த 2 வருடங்களாக சரியாக பணி இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். எங்களுக்கு டிரைவர், கண்டக்டர் பணியைவிட்டால் வேறு வேலை தெரியாது. எனவே வாழ்வாதாரத்தை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு கொடுத்துள்ளோம்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழும் மனு கொடுத்துள்ளோம்.
தற்போது மகளிர் கட்டணமில்லா திட்டத்தால் தனியார் பஸ்களில் பெண்கள் குறைந்த அளவிலேயே பயணிக்கின்றனர்.
இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே எங்களது நிலை கருதி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் எங்களுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.