செய்திகள்
அரவக்குறிச்சி அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
கரூரில் பெண்ணிடம் 1½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பானுமதி (வயது 46). இவர் கரூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை பணி முடிந்து நண்பருடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து கொண்டு ஊருக்கு சென்று கொண்டு இருந்தார்.
கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் அமராவதி பாலம் அருகே உள்ள மண்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பானுமதி கழுத்தில் அணிந்த 1½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பானுமதி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அதற்குள் மர்மநபர்கள் தங்கச்சங்கிலியுடன் தப்பி சென்றனர். இதுகுறித்து பானுமதி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிந்து, தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.