செய்திகள்
பணம் கொள்ளை

திருக்கோவிலூர் அருகே பஸ் டிரைவர் வீட்டில் ரூ.7¾ லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2021-10-16 12:09 GMT   |   Update On 2021-10-16 12:09 GMT
திருக்கோவிலூர் அருகே பஸ் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7¾ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள டி.கே.மண்டபம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவர் தனியார் பள்ளி ஒன்றில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அலமேலு(வயது 46) வீட்டின் அருகிலேயே பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பெட்டிக் கடையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.7¾ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து சேட்டு மனைவி அலமேலு திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சேட்டு, அவரது மனைவியுடன் பெட்டிக்கடையில் இருந்ததை அறிந்து கொண்டு யாரோ மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பஸ்டிரைவர் வீ்ட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News