செய்திகள்
போச்சம்பள்ளி அருகே காலணி தயாரிக்கும் நிறுவன வாகனங்களை பொதுமக்கள் முற்றுகை
போச்சம்பள்ளி அருகே காலணி தயாரிக்கும் நிறுவனத்தின் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, அந்த நிறுவன வாகனங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஓலப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காலணி (ஷு) தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சேகரமாகும் கழிவுகளை மாதம்பதி ஏரி மற்றும் அதன் அருகில் சாலையோரம் இரவு நேரங்களில் கொட்டி வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த நிறுவனத்தில் இருந்து கழிவுகளை ஒரு லாரியில் ஏற்றி வந்து சாலையோரம் கொட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் போச்சம்பள்ளி-கொடமாண்டப்பட்டி சாலையில் மாதம்பட்டி கூட்டு ரோடு அருகில் திரண்டனர். அவர்கள் ஓலப்பட்டியில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்த 10-க்கும் மேற்பட்ட பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.